அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
போன பதிவில் ஒற்றுமிகும் இடங்களைக் கோடிட்டுக் காட்டினேன். இப்போது ஒற்றுமிகா இடங்களைப் பற்றி கூறுகிறேன்.
பொதுவான விதிகள் (ஒற்று மிகா இடங்கள்):
—————————————————————-
அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது – இந்த சொற்களுக்குப் பின் ஒற்று மிகுவதில்லை.
(எ-கா)
அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.
இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.
எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?
அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.
இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.
எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?
அவை + பெரியவை = அவை பெரியவை.
அது + பெரியது = அது பெரியது.
இவை + சிறியவை = இவை சிறியவை.
இது + சிறியது = இது சிறியது.
எவை + தந்தன = எவை தந்தன?
எது + தந்தது = எது தந்தது?
யாவை + பெரியவை = யாவை பெரியவை?
ஏது + கடல் = ஏது கடல்?
எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், “த்த”, “ந்து” என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது.
எடுத்துக்காட்டுகள் கீழே:-
எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-
(எ-கா)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-
(எ-கா)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்
வினைத் தொகைகள்:-
(எ-கா)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை
உம்மைத் தொகைகள்:-
(எ-கா)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)
“த்த, ந்து” என முடியும் சொற்கள்:-
(எ-கா)
பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்
11:59 பிப இல் 02/12/2009 |
அன்பின் தியாகராஜன்
நல்ல இடுகை – பயனுள்ள இடுகை
நல்வாழ்த்துகள்
12:12 முப இல் 03/12/2009 |
மிக்க நன்றி சீனா அவர்களே
11:56 முப இல் 03/01/2011 |
migunthaa nandri