என்னைப் பற்றி….
.
வலையுலா வரும் வழமைத் தமிழன்பர்களே!
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
என்னைப் பற்றிய சிறு குறிப்புரை: என் பெயர் இராஜ. தியாகராஜன், புதுச்சேரி அரசில் ஒரு அரசிதழ் அலுவலன். என் குடும்பத்திற்குப் பின் தமிழும் தமிழிசையும் எனதிரு கண்கள். ஏதோ என்னாலியன்றவரை தமிழுக்காகவும், குமுகாயத்திற்கும் செய்கிறேன்; வாழ்கிறேன். இந்த தளத்தில் முகப்பில் இருக்கும் தமிழ்மொழி/ திருவள்ளுவர் என்ற படத்தினை நானே உருவாக்கி வலையேற்றினேன். அய்யனின் உருவம் எங்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்தின் முகப்பில் இருக்கும் சிலையினது. என்னுடைய தளம்: www.pudhucherry.com .
நான் எழுதுகையில் புனைப் பெயரென்று எதையும் பயன்படுத்தவில்லை. என்னுடைய உண்மைப் பெயரே, அன்புசால் அன்னையும், அறிவுசால் தந்தையும் எனக்களித்தவோர் புனைவுதானே! தான் யார், இம்மெய்யா, அன்றி உள்ளிருக்கும் பொய்யா என்பதை ஆன்றோரும், சான்றோரும் ஆழ்ந்திங்கே தேடிச் சலிக்கையிலே, அத்தனை அறிவில்லா இச்சிறுவனுக்கு மட்டில் கிட்டுமோ அந்த அகச்சான்று? தந்தையின் பெயரான இராஜகோபாலன் என்பதில் இருக்கும் “இராஜ” என்ற பகுதியை அடைமொழியாக்கி எனக்கிடப்பட்ட பெயரான தியாகராஜனுடன் சேர்த்து எனை அறிமுகம் செய்து கொள்கிறேன். எழுதுகிறேன்… இடையறாது எழுதுகிறேன்….. எனக்கிருக்கும் ஓய்விலெல்லாம் எழுதுகிறேன்…. எது, எவர், எப்படி, எதற்கு என்று கேட்காமல், தமிழுக்காய் எழுதுகிறேன்.
ஒரு நண்பர் கேட்டார், “உங்களுக்கிருக்கும் தமிழார்வத்திற்கு, அரசுப்பணியில் இருப்பதனால், தமிழில் ஒரு நூல் வெளியீடு செய்து, அரசு விழாக்களில் அரசியலார்க்குப் பொன்னாடை போர்த்தி, காணும் மேலோருடன் எல்லாம் சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டு, அரசு வழங்கும் பட்டங்களை எளிதாக பெற்று விடலாமே,” என்று. அதற்கு நான் சொன்னேன், “விருதுகளைத் விழுந்து விழுந்து, வேகமாகத் தேடும் வியனுலகில், ஊரில் நடக்கும் கவிதைப் போட்டிகளில் கூட எழுத தோன்றாத, நான் ஒரு நிலையில்லாச் சிந்தனை கொண்டவன் போலும்! எனக்குத் தெரிவதெல்லாம் என் குடும்பம், என் தமிழ், என் சமூகப் பணி. சென்ற ஆண்டுவரை என்னைப் பற்றியும், தமிழைப் பற்றியும் நிறைய பகிர்ந்தவன், என்னுடைய சமூகப் பணிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள மிகவும் வெட்கப்பட்டு, எதுவுமே கூறுவதில்லை. ஆனால் இணையத்தில் திருமதி வசந்தா கிருஷ்ணசாமி என்ற இனிய சகோதரி அவர்கள் அவர்தம் பெற்றோர் பற்றியும், அவர்தம் தொண்டுகள் பற்றியும், சொன்ன கருத்தினால் ஈர்க்கப்பட்டு, இப்போது
பரவாயில்லை ஓரளவு பகிர்கிறேன்.
ஏனென்றால், என்னையும் ஒரு ஆதர்சமாக எண்ணிச் செயல்படும் நண்பர்கள் வரத் தொடங்கி விட்டனர். ஆகையினால் அப்பணிகள் அவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணமே காரணம். அட இதென்ன பில்டப்பு என்று கேட்பதற்கு முன்னால் சொல்லிவிடுகிறேன். நானொன்றும் பெரிய சமூகச் சேவகன் இல்லைங்க. ஏதோ, கடந்த சில ஆண்டுகளாகச் புதுவையின் சில இல்லங்களுக்கு இயன்ற உதவி செய்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடை செய்கிறேன். 2001இல் என்னுடைய விழிப்படலங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறேன். மேலும் 2007இல், தீத்தின்னும் இவ்வுடலத்தை மருத்துவத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும்படி எழுதிக் கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதாங்க! இப்போது இறுதியாக, நான் தமிழை முதற்பாடமாகக் கொண்டு தமிழ் படித்த தமிழ்ப் பண்டிதன் இல்லை. தமிழாசிரியனும் இல்லை. இளங்கலைப் பொருளாதாரப் பட்டம் பெற்ற, சில கணினிச் சான்றிதழ்ப் பட்டயங்கள் வென்ற, இன்னும் ஒரு நூல் கூட வெளியிடத் தெரியாத, அரசுத் துறையில் கணக்கிடல் பிரிவில் பணிபுரியும் மிகச் சாதாரண, அரசிதழ் அலுவலன். பண்ணார் தமிழணங்கின் மீது மோகமுற்ற ஒரு பித்தன். வாருங்கள் தமிழைப் பேசுவோம், தமிழால் பேசுவோம், தமிழுடன் பேசுவோம், தமிழுக்காய்ப் பேசுவோம்!
5:05 பிப இல் 02/12/2009 |
GREAT WORK! PLEASE CONTINUE! COMMENT IN MY BLOGS!
START A WTVF BRANCH THERE!KEEP IN TOUCH! SAY MY KIND REGARDS TO MR&MRS.VEERA MATHURAKAVI! MY OLD FRIEND!
11:54 பிப இல் 02/12/2009 |
அன்பின் தியாகராஜன்
அருமையான அறிமுகம்
எடுத்த செயல் எழ்ப்பொழுதும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
12:20 முப இல் 03/12/2009 |
மிக்க நன்றி சீனா அவர்களே
3:09 பிப இல் 02/09/2011 |
“பண்ணார் தமிழணங்கின் மீது மோகமுற்ற ஒரு பித்தன். வாருங்கள் தமிழைப் பேசுவோம், தமிழால் பேசுவோம், தமிழுடன் பேசுவோம், தமிழுக்காய்ப் பேசுவோம்!”
வணக்கம் ஐயா!
தங்களின் தளம் இன்று தான் பார்த்தேன்!!!
மிகவும் அற்புதமாக விரிகின்றதே!!! ஆச்சரியம்!!
மிகவும் நீண்ட நாட்களாக நானும் யோசித்தேன்!!
இவ்வளவு படைப்புகள் வைத்திருகின்றாரே..
இவர் ஏன் ஒரு தளத்தில் பதிவு செய்யவிலலை?? என்னை நானே கேட்டிருக்கிறேன்!.
இன்று மிகவும் சந்தோசம்!!
தங்களுக்கு பூக்கள் தூவுவதற்கும்…
பொன்னாடை சாத்துவதற்கும்
என்னிடம் தமிழ் இல்லை!!
தங்கள் தமிழுக்கு
என்தலை சாயத்த வணக்கங்கள்!!
அன்னைத் தமிழுக்கு அணிகலன்கள்
பூட்டி அழகு பார்ப்போம்!
நன்றி ஐயா!
12:27 பிப இல் 03/09/2011 |
வணக்கம் கவிஞர் ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா. மிக்க நன்றி உங்களின் இனிய கருத்துரைக்கு. என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் இணையத்திலேயே விரவிக் கிடக்கின்றன. நான் அதிகம் அவற்றை கணினியில் சேமித்துக் கொள்ளவில்லை; கொள்ள வேண்டும் என்றும் எண்ணிப் பார்த்ததில்லை. கடந்த சில திங்களுக்கு முன்னர், என்னுடைய முகநூல் கணக்கு திறக்க இயலவில்லை. அதில் நிறைய படைப்புகளை வைத்திருக்கிறேன். எனவே மீள் பதிவாக வேறு இடத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லச்சு தளத்தில் ஒரு வலைப்பூவாக உருவாக்கி வலையேற்றினேன். விரைவில் அனைத்தையும் என்னுடைய சொந்த தளமான http://www.pudhucherry.com இல் பதிவேற்றம் செய்வேன்.
2:13 பிப இல் 04/01/2013 |
நல்லது இராச தியாகராசன் அவர்களே வாழ்க உங்களது தமிழ் உணர்வு வளர்க உங்களது தமிழ்ப்பணி
5:22 பிப இல் 18/03/2013 |
மிக்க நன்றி குறிஞ்சிக்கபிலன் உங்கள் இனிய கருத்துரைக்கு.
1:23 பிப இல் 10/02/2013 |
வணக்கம் ஐயா!
தங்களின் தளம் இன்று தான் பார்த்தேன்!!!
புதுச்சேரி.காம் பார்த்தேன்.மிகவும் மகிழ்ந்தேன்.உங்களுக்கு அடக்கம் அதிகம் நீங்கள் பெற்றிருக்கும் அறிவைப் போல்
http://seasonsnidur.com/
LINK (Tamil)
புதுச்சேரி.காம்
4:59 பிப இல் 10/03/2013 |
உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா. உங்கள் அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துகள். நண்பர் திரு பாரதிப் பித்தன் (சிவகாசி) உங்களைப் பற்றிச் சொன்னார். இன்னொரு மதிப்பிற்குரிய லண்டன் நண்பரும் உங்களைப் பற்றிச் சொன்னார்.
நன்றி.
5:24 பிப இல் 18/03/2013 |
மிக்க நன்றி இரத்தினவேல் நடராஜன் உங்கள் இனிய கருத்துரைக்கு. நான் வலையேற்றுதல் மட்டுமே செய்கிறேன். வலைப்பூக்களில் அதிகம் கருத்தாடல்கள் செய்ய இயலவில்லை. பணி நெருக்கம்.